Sunday, May 25, 2008

தங்க குட்டி லக்க்ஷிக்கு ...




பிறந்த உன்னை காண
பல தூரம் பயணம் செய்தேன்
கற்பனையில் உன்னை சுமந்தபடி ...

பட்டு போன்ற உன் மேனியை
தொட்டு ரசித்து கொண்டிருந்த தருணத்தில்
என் ஸ்பரிசத்தின் வாசத்தை
சுவாசமாய் உட்கொண்டாயோ தங்கமே ...

காரணமில்லா அழுகையையும்
என் கரம் பற்ற
அமைதிக்கொண்டாய் ...

அலைகள் போல நீ தவழ
உன்
புரியா மொழியையும்
மொழி பெயர்த்து இன்பம் கொண்டேன் ...

நீ தவழ்ந்ததை ரசித்தவள்
நீ நடந்ததை கண்டு
வியந்தே போனேன் ...

படிப்படியான வளர்ச்சிகள்
எல்லா குழந்தைகளுக்கும் நிகழ்வதுதான்
என்றாலும்
நீ தழைக்கும் ஒவ்வொரு அடியையும்
வியப்புடன் ரசித்தேன் கண்ணே ...

இன்று
சிறு பிள்ளையாய்
பள்ளி செல்லும் உன்னை பார்த்து
அழகாய் சிரிக்கிறாய் என்று
பல மணி நேரம் ரசிக்கும் என்னை
பைத்தியக்காரி என்பாயா
அல்ல
பாசக்காரி என்பாயா...?

லக்க்ஷி ...
பள்ளிக்காலம் விட்டு
பருவக்காலம் தொட்டாலும்
உன் சின்னஞ்சிறு அசைவுகளுக்கு
என்றும்
ஒரு ரசிகை நானடி ...

- சிந்து ...

No comments: